விழுப்புரம் : நாங்கள் போட்ட பிச்சையில்தான் அன்புமணி எம்.பி.யானார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் பிரசாரத்தின்போது,  காட்டமாக விமர்சனம்  செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணியில் வி.சிறுத்தைகள் கட்சி சார்பில் சிட்டிங் எம்.பி. ரவிக்குமாரும், பாஜக கூட்டணியில்  பாமக சார்பில் முரளி சங்கரும், அதிமுக கூட்டணியில்  அதிமுக வேட்பாளராக பாக்கியராஜ,  நாம் தமிழர் வேட்பாளராக இயக்குனர் களஞ்சியம் போட்டியிடுகின்றனர். அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் அதிமுக கூட்டணி சார்பில், நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டம்,  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில்,  விழுப்புரம் தொகுதி அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாக்கியராஜ்யை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக, பாமக, பாஜக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

 மத்தியில் பாஜக மோடியும்,  மாநிலத்தில் திமுக ஸ்டாலினும் ஆட்சி செய்கிறார்கள். இந்த   இரண்டு கட்சிகளும் மக்களுக்கு  ஒன்றும் செய்யவில்லை. எதிர்கட்சிகள் ஆட்சி செய்தால் மத்திய அரசு நிதி அளிப்பதில்லை. அது பாஜக அரசாகவும் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் இரண்டு பேர்களே இதை தான் செய்கிறார்கள். தமிழகத்தை மாற்றான் தாய்பிள்ளைபோல் பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்தார்.

மேலும்,  தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாகவும் கலெக்‌ஷன் கரப்பஷன், கமிஷன் திமுக ஆட்சியில் சரியாக நடந்து கொண்டு இருப்பதாகவும், திமுக கட்சியே அல்ல கார்பரேட் கம்பெனியாக செயல்படுவதால் மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறார்கள்” குற்றஞ்சாட்டியவர், திமுக கட்சி என்பது குடும்ப கட்சியாக உள்ளது அதில் நான்கு முதல்வர்கள் உள்ளார்கள் உதயநிதி ஸ்டாலின், சபரீசன், துர்கா ஸ்டாலின்தான் முதல்வராக உள்ளதாகவும் திமுகவில் அவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் முதல்வராக வர முடியும் என்றும்,  திமுக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் நீதிமன்றங்களில் ஏறி இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கினை திமுக அரசு போடுவதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழகம் முழுவதும் ஆறாயிரம் கோடி மதுபான கடைகள் உள்ளன இதில் 3 ஆயிரம் கோடி ஊழல் செய்த அரசாக திமுக உள்ளதாகவும்,  தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்வதாகவும், அராஜகம் பிடித்த கட்சியாக திமுக உள்ளதாகவும் மதத்தின் அடிப்படையில் அதிமுக ஒருபோதும் பிரித்து பார்க்காது என்றும் இந்தியாவிலையே முதல் மாநிலமாக கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும் மின் கட்டணம் 52 சதவிகிதம் உயர்த்தபட்டுள்ளதாகவும், மக்களை வாட்டி வதைக்கும் அரசாக திமுக உள்ளதாக கூறினார்.

கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைக்குண்டம் போனான் என்பது ஸ்டாலினுக்கு பொருந்தும் என்றும் கள்ளச்சாரம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாகவும், காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலை தான் உள்ளதாகவும் பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து  பாமக கடுமையாக விமர்சித்த எடப்பாடி,  அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அதிமுக போட்ட பிச்சை.  பாமக, பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமாட்டோம் என கூறிவிட்டது இப்போது பாமக கொள்கை என்னாவாயிற்று என கேள்வி எழுப்பியவர், கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் டிசம்பரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு போடப்பட்டது. அதன் பிறகு வந்து ஸ்டாலின் அரசு இதனை செயல்படுத்தவில்லை என்று கூறியவர்,  வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என கூறும் மோடி, தற்போது  வாரிசு அரசியலுடைய பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது. சந்தர்ப்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள். அதிமுக எப்போதும் ஒரே நிலைப்பாடுதான். அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளோடு கூட்டணி தர்மத்தோடு நடந்துகொள்வோம். சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எங்களுடன் கூட்டணி அமைத்து அதனை அவர்களுக்கு சாதகமாக்கி எங்களை விமர்சனம் செய்கிறார்கள்.

இவ்வாறு பேசினார்.