திருச்சி:

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது என்றவர்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி போல போல நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும் அமுமுக தலைவர்  டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,  பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக சில கட்சிகளுடன்  கூட்டணி தொடர்பாக  பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்,  அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோமா என்பதை தற்போது கூற முடியாது என்றவர், நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு  தி.மு.க., மெகா கூட்டணி அமைத்தாலும்  அது  மக்களிடம் எடுபடாது. என்றவர்,  திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க.ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்ற டிடிவி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமீப காலமாக  பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நாடகம் ஆடுகிறார். தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டில்லி சென்றால்அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன் ,எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். அவருக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

ஆனால், முதலில் பன்னீர் செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக்கி எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார். அந்த விரக்தியில் தம்பிதுரை பலவாறு பேசி வருகிறார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது  என்றவர்   கொடநாடு விவகாரத்தில் உண்மையை  கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதால், உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.