அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகமைந்துள்ள அம்மாசத்திரம் கிராமத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மராட்டிய மன்னர் சரபோஜி திருப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இது பழைமையான சிவபெருமான் திருக்கோயிலாகும்.

சிறப்புத் திருவிழாக்கள்:

தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி/கார்த்திகை மாத காலபைரவர் ஜெயந்தி, ஞாயிற்றுக் கிழமை ராகு நேர வழிபாடுகள்

தொன்மை:

1500 ஆண்டுகள்

இத்திருக்கோயில் காலபைரவர் வழிபாட்டுக்குச் சிறந்த தலமாகக் கூறப்படுகின்றது.

தலவரலாறு

சப்த ரிஷிகளான மரீசி, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்திருத்தலத்தில் வழிபட்டதால் இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. ருத்ராட்சப்பந்தலின் கீழ் அமைந்துள்ளார்.

பவிஷ்யோத்தர புராணம் 

பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.

நவக்கிரக சக்கரம்

ஞானாம்பிகை அம்பாள் சன்னிதி மண்டப உட்புற விதானத்தில் 12 ராசிகள் அமைக்கப்பட்டு, நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் என 81 கட்டங்களும், ஒவ்வோர் கட்டத்திலும் தமிழ் எண்கள் ஒன்றிலிருந்து ஒன்பது வரை பொறிக்கப்பட்டு, எவ்விதம் கூட்டினாலும் 45 என்ற எண் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களின் சுழற்சியைக் குறிக்கும் விதமாக அமைந்த அரிய வடிவமைப்பு இந்த நவக்கிரகச் சக்கரம்.

பரிகார தலம்

மனநிலை பாதிப்பு, தீயசக்தியால் பாதிப்பு, செய்வினை தோஷங்கள், அமைதியின்மை முதலான பல துன்பங்களுக்குத் தேய்பிறை அஷ்டமியில் இத்தல பைரவருக்கு வழிபாடு செய்வது நிவர்த்தி தரும் என்று ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.