சென்னை:

மிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும்  அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  ஜெயலலிதா மறைவுக்குப் பின் இவர் சசிகலா மற்றும் தினக்ரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தார். திமுக தலைவர் ஸ்டாலிடம் நெருக்கம் காட்டினார். ஆனால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு சமயத்தில் அதிமுகவுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது, அதிமுக அமைத்த கூட்டணி தொடர்பாக கடுமை யாக விமர்சித்த கருணாஸ்,  அதிமுக அமைத்துள்ள கூட்டணி ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில்  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில், டிசம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் தலைவருமான கருணாஸ்,  உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்துக்கள் நியாயமற்றவை என  கூறியவர்,  போர்க்களத்தில் நிற்காதவர்கள், உடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரே ஆதாரத்தை வைத்துக்கொண்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது நியாயமற்றது என குறிப்பிட்டார்.

பச்சோந்தி போல நேரத்துக்கும், இடத்துக்கும்  தகுந்தவாறு  மாறி மாறிப் பேசும் கருணாசின்  பேச்சு, அவரது கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.