வாரணாசி: வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள  அலகாபாத்  உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து,  தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி சிவன்கோவிலை இடித்து கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்த நிலையில், இந்த மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.  . இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ளே இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.

இதையடுத்து, மசூதியின் வளாகத்தில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, மசூதி சார்பில் வாரணாசி உயர்நீதிமன்றத்தில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தலாம் என  கடந்த ஜூலை  21ம் தேதி  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  இதையடுத்து பலத்த பாதுகாப்புடன்  ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள இருந்தனர்.

இதற்கிடையில், மசூதி தரப்பில் ஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி  அலகாபார்த உயர்நீதிமன்ற  தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், தொல்லியல் துறை ஆய்வை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தொல்லியில்துறை ஆய்வை ஜூலை 26ந்தேதி மாலை 5மணி வரை நிறுத்தி வைக்க விசாரணையைத் தொடர்ந்து, அலகாத் உயர்நீதிமன்றத்தை நாட, மசூதி கமிட்டிக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியது. அந்த மனுவை தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறை ஆய்விற்கான தடையை ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டித்தது.  தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பு  ஆகஸ்ட் 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அதுவரையில் தொல்லியல் துறை மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தக் கூடாது எனவும், அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று  அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி பிரிதிங்கர் திவாகர் தலைமையிலான அமர்வு மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. மேலும், அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.