டெல்லி:  இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள பிரபல தொழில்அதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட  பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப் பட்டு, நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டிருப்பதாக  நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி முடக்கி வருகின்றனர். இருந்தாலும் இதுவரை 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதுடன், உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலங்களவையில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள  விஜய் மல்லையா, நீரவ் மோடி  போன்ற  பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பண விவரம் குறித்து  கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடியவர்கள் மொத்தம் 19 பேர். இவர்களில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல், ஜுனைத் இக்பால் மேமன், ஹஜ்ரா இக்பால் மேமன், ஆசிப் இக்பால் மேமன் ஆகியோர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற 9 பேரையும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது. அதேசமயம், விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.