நெல்லை: உள்கட்சி பிரச்சினை காரணமாக, தற்கொலை முடிவை நாடிய ஆலங்குளம் தொகுதி  திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா  உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த மறைந்த  முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவின் மகளான மருத்துவர் பூங்காகோதை, தந்தைமறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். இவர் இருமுறை ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மறைந்த கருணாநிதி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றியவர். தற்போதும் ஆலங்குலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,  பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அவரை குடும்பத்தினர் நெல்லையில் உள்ள ஷீபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல்சிகிச்சை அளிக்கும் வகையில், அவரை ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

பூங்கோதை  தற்கொலை முயற்சி குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை மேற்கொண்டு வரும் நிலையில், கட்சியில் பல்வேறு அதிருப்திகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாகவே, பூங்கோதை எம்எல்ஏ ஓரம்கட்டப்பட்ட நிலையில், அவர் தற்கொலை முடிவை நாடியதாகவும் கூறப்படுகிறது.

தென்காசி மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனுக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு சில காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், சிவபத்மநாபன் ஆதரவாளரான  சீவலப்பேரி பாண்டியன் என்பவர் பூங்கோதை ஆலடி அருணா குறித்து,  அவதுறாகவும், அருவறுப்பாகவும்  பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பூங்கோதை இரவு தூங்கச்சென்றபோது, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முடிவை நாடியதாக கூறப்படுகிறது.

காலையில், அவர் எழுந்திருக்காததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை எழுப்ப முயன்றும் முடியாத நிலையில், மயங்கிய நிலையில் நெல்லையில் உள்ள ஷிபா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு இன்னும் நினைவுதிரும்பாத நிலையில், தற்போது ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரபபடுகிறார்.

பூங்கோதை தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது,