பஞ்சாப், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத் என்று வடஇந்திய மாநிலங்கள் பலவும் தங்களுக்கு என்று தனி மொழி அடையாளத்தை கொண்டுள்ள போதும் அவர்கள் வாயைத் திறந்தவுடன் ஸ்பீடாக முந்திக் கொண்டு வருவது இந்தி என்று ஆகிவிட்டது.

இதே போன்ற ஒரு நிலையை தென்னிந்தியாவிலும் உருவாக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது அதற்காக ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் மட்டுமன்றி திரைபிரபலங்களும் இந்திக்கு எதிராக குரல்கொடுத்தனர்.

அதேபோல், கர்நாடகாவிலும் இந்திக்கு எதிரான கருத்து எழுந்தது, கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கே.ஜி.எஃப். வெற்றி விழாவில் பேசிய நடிகர் சுதீப் கிச்சா “இனியும் இந்தியை தேசிய மொழி என்று யாரும் கூறவேண்டாம்” என்று பேசினார்.

இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஜய் தேவ்கான், “பிறகு எதற்கு உங்கள் மொழி திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்” என்று சுதீப்புக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

அஜய் தேவ்கானின் இந்த பதிவில் இந்தி மொழி தேசிய மொழி என்று குறிப்பிட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநில மொழிகளைப் போன்றதே இந்தி மொழி அதற்கு தேசிய மொழி என்ற சிறப்பு அந்தஸ்த்து ஏதும் இல்லை என்பது கூட தெரியாமல் வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் பேசி வருவது குறித்து சமூக வலைத்தளங்களில் மீண்டும் விமர்சனங்கள் தொடங்கியுள்ளது.