ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனான 18 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்ளப் போவதாக ஜனவரி 17 ம் தேதி நள்ளிரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் தனுஷ்.

இந்த நள்ளிரவு அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த அவரது நெருங்கிய வட்டாரங்கள் இந்த மனக்கசப்பு ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்று கூறினார்கள்.

இரண்டு மாதம் கடந்த நிலையில் எந்தப் பக்கமும் திரும்பாமல் வெளியூரில் இருந்தபடி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அவரவர் வேலையில் தனித்தனியாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் கடந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயணி’ என்ற இசை ஆல்பத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, “இறுதியாக காத்திருப்பு முடிந்தது, எனது முதல் சிங்கிள் ‘பயணி’, 9 வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் தமிழில் நாளை வெளியாகிறது. உங்களுடன் இதை பகிர்ந்துகொள்ள காத்திருக்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.