சென்னை: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கக்கோரி  ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது மார்ச் 25-ல் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், தனி அணியாக சிலருடன் செயல்பட்டு வருகிறார். அவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை, கொடி போன்வன்றை உபயோகிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதித்து,  ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து, கடந்த மார்ச் 18ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா, இல்லையா என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது என சுட்டிக்காட்டியதுடன்,  42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாக மேல் முறையீட்டு மனுவில் கூறியுள்ளார். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும், இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், மேல் முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் வரும் மார்ச் 25ஆம் தேதி நான்காவது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.