சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம்  அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்ககிடையில், யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுகவில் விருப்பமனு கடந்த சில நாட்களாக பெறப்பட்டது. அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த 8 நாட்களில் 7,967 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதையடுத்து, இன்று வேட்பாளர் நேர் காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அதிமுக தலைமை கழக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம்  உள்பட அவை தலைவர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் நேர்காணலை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

 

இதனிடையே,  தொண்டர்களிடையே  பேசிய முதல்வர் பழனிசாமி, 5 மாவட்டங்களுக்கு ஒருங்கிணைந்த வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. யார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.