சென்னை: தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்க வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணை அடிப்படையில் 87 பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலைக்கான உத்தரவையும்  வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ரூ.15 கோடி மதிப்பில் 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டத்தையும்,  கருணை அடிப்படையில் 87 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (24.12.2021) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.15 கோடி மதிப்பில், கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி, கதிர்அறுவாள் ஆகிய வேளாண் உபகரண தொகுப்புகளை 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வழங்கிடும் அடையாளமாக 5 வேளாண் குடும்பங்களுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.

உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை- உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை- உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கென 14.8.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தனி நிதிநிலை அறிக்கையில், அன்றாட விவசாயப் பணிகளை எளிதாக மேற்கொள்ளத் தேவைப்படும் மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய வேளாண் உபகரணங்கள் தொகுப்பு, அரை இலட்சம் விவசாயப் பெருமக்களுக்கு வழங்கப்படும் என்றும், இத்திட்டம் 15 கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண் உபகரணங்களான கடப்பாரை, இரும்புச்சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி மற்றும் இரண்டு கதிர் அறுவாள்கள் ஆகிய ஆறு உபகரணங்கள் அடங்கிய ரூ.3,000 மதிப்பிலான “வேளாண் உபகரணங்கள் தொகுப்பு” 64,444 வேளாண் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.15 கோடி மதிப்பில் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தின் வாயிலாக இவ்வேளாண் உபகரணங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பொது விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் அல்லது ரூ.2250/- மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 90 சதவிகித மானியம் அல்லது ரூ.2700/- மிகாமலும் வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும்.

ஒரு வேளாண் குடும்பத்திற்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். இத்திட்டமானது சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல் படுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக விருப்பமுள்ள விவசாயிகள் பதிவு செய்து பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக சிறு, குறு விவசாய பெருமக்களின் உழைப்பு திறன் மேம்படுத்தப்பட்டு, உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

அதனைத்தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 87 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.