சென்னை:

ன்று இரவு சென்னையில் நடைபெற உள்ள  ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவல்லிக் கேணி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல  தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி  நடைபெற உள்ளது.   அதன் காரணமாக சேப்பாக்கம் மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சிலர், மைதானத்தின் கேட்டுக்கு பூட்டுபோட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில், திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சேப்பாக்கம்  மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றனர். ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றவர்கள், கலைவாணர் அரங்கத்தின் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதே நேரத்தில், சென்னை அண்ணா சாலையில், கையில் கறுப்பு நிற பலூனுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனால் திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதிகளில் பதற்றம், பரபரப்பு நிலவி வருகிறது.