சென்னை:

மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் வெடிக்கும் என்று முக ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இந்திய நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு. பாரம்பரிய பெருமை மிக்க இந்த மண்ணில் பல மதத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுவோரும், பலவித பண்பாடுகளைப் பின்பற்றுவோரும் அவரவருக்கான உரிமைகளுடன் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில், இந்தி-சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது.

அதன் ஒரு பகுதியாக, குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்தின் கிராமப்புற-ஏழை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் செய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற முனைப்பு காட்டாத மத்திய அரசு, இந்தியில் உரையாற்றவும் அறிக்கை வெளியிடவும் இத்தனை வேகம் காட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

விமானநிலைய அறிவிப்புகள்,பத்திரிகை செய்திகள்-விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் இந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிதிருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளியிடும் விளம்பரங்கள் எந்த மொழியில் இருந்தாலும், அந்த சொற்கள் இந்தி உச்சரிப்பாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக, ஸ்வச் பாரத் என்றே எல்லா மொழிகளிலும் விளம்பரம் செய்யப்படுகிறது. தூய்மை இந்தியா என்கிற தமிழ்ச்சொல்லோ அதற்கு இணையாக இந்தியாவின் பிற மாநில மொழிகளில் பயன்படுத்தப்படும் சொற்களோ முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அரசுத் திட்டங்களுக்கானப் பெயர்கள் அனைத்தும் இந்தி அல்லது சமஸ்கிருதத்திலேயே சூட்டப்படுகின்றன. ஆசிரியர் தினத்தைக்கூட குரு பூர்ணிமா என மாற்றியது மோடி அரசு.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்கிறது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்து தந்த அரசியல் சட்டம். ஆனால், இந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் பல மொழி பேசுவோரும் அறிந்திருக்கக்கூடிய இணைப்பு மொழியான ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, இந்தியில் எழுதும் வேலையை அண்மையில் மேற்கொண்ட மத்திய அரசு, இப்போது இந்தியாவின் உயர்ந்த ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றம் தொடங்கி, நாட்டின் எதிர்காலத் தலைமுறையை வளர்த்தெடுக்கும் பள்ளிகள் வரை இந்தி மொழியைத் திணிப்பதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிருப்பது இந்தியாவில் வாழும் பிற மொழி பேசும் மக்களுக்கு செய்கின்ற வஞ்சச் செயலாகும்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1962ஆம் ஆண்டு உரையாற்றிய காலம் தொடங்கி, தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை வலியுறுத்தி வருவதுபோல, இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும். அதற்கு மாறாக, இந்தி மொழியை மட்டும் திணிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயலாகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளும் இந்தித் திணிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். தாய்மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை 1938ஆம் ஆண்டு முதலே எதிர்த்து நின்று வெற்றி கண்ட நிலம், தமிழகம். மொழிப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்த்தியாகம் செய்த வீரவரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுவதுடன், இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.