சென்னை

சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் சென்னை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அன்று சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம், வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது காணாமல் போனது.

விமானத்தில், விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்தியக் கடற்படை மற்றும் இந்தியக் கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர்கள், கடற்படை ஆயுதக் கிடங்கில் பணிபுரியும் 8 பேர் (இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள்) என 29 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதும், தேடும் பணி முடுக்கி விடப்பட்டு 16 கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல், 6 விமானங்கள் மூலம் சென்னையில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் வரை தேடும் பணி நடைபெற்றது. மேலும்  ராடாருடன் கூடிய செயற்கைக் கோள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டது.

இந்த தேடுதல் பணி நீண்ட நாட்கள் நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், செப்டம்பர் 15ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தற்போது மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கிமீ தொலைவில் கடலுக்கடியில் 3.4 கிமீ ஆழத்தில் கிடக்கும் பாகங்கள், காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.