பழநி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை சுமார் 9 மாதங்களுக்கு பிறகு வரும் 28ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த தகவலை   கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

டிசம்பர் 28ந்தேதி முதல்  கோவிலில் பக்தர்களுக்காக ரோப் கார் சேவை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

“காலை 7 மணிமுதல் பகல் 1.30 மணிவரையிலும், பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் ரோப்கார் இயக்கப்படும்.

கட்டண தரிசனம் அல்லது பொது தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு (http://tnhrce.gov.in) செய்தவர்களுக்கு மட்டுமே ரோப்காரில் செல்ல அனுமதியளிக்கப்படும்.

நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 1,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரோப்காரில் செல்ல ஒரு நாள் முன்னதாக தொலைபேசியில் (0445- 242683) தொடர்புகொண்டு தெரிவித்து முன்னுரிமை பெற்று ரோப்காரில் செல்லலாம்.

தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி வெப்பநிலை சோதித்தபிறகே ரோப்காரில் செல்ல அனுமதிக்கப்படுவர்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.