சென்னை

ம்மை அதிமுக மூன்றாம் தலைமுறை தலைவராக வரத் தொண்டர்கள் விரும்புவதாக சசிகலா கூறி உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயன்றார்.  இதற்கிடையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் சிறையில் இருந்து வெளியான பிறகு  தனது ஆதரவாளர்களுடன் பேசும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.

தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன் சசிகலா உரையாடிய ஆடியோ வெளியாகி உள்ளது.  அதன் விவரம் வருமாறு

ரூபம் வேலவன் சசிகலாவிடம், ”உங்கள் பிறந்தநாளில் (ஆகஸ்டு 18-ஆம் தேதி) உங்களைச் சந்திக்க நினைத்தோம், முடியவில்லை அம்மா.” எனக் கேட்டுள்ளார்.

சசிகலா,” தற்போது கொரோனா காலம் என்பதால், உங்களது பகுதிகளிலேயே ஏதாவது பூஜை செய்யுங்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி உதவுங்கள். எனக்காக மட்டுமல்ல, அனைத்து மக்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள். அதுவே எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக அமையும்.

தொண்டர்களைத்தான் எனக்குத் துணையாக அம்மா (ஜெயலலிதா) விட்டு சென்றிருக்கிறார். எனவே எல்லாமே நல்லதாகவே நடக்கும். இதுவரை என் பிறந்தநாளை அம்மாவுடன்தான் கொண்டாடி உள்ளேன். எனவேதான் இப்போதெல்லாம் பிறந்தநாள் கொண்டாடவே ஆசை வருவதில்லை. ஆகவே எனது பிறந்தநாளைக் கொண்டாட விரும்பும் தொண்டர்கள், ஏழை மக்களுக்கு உதவிகள் புரிந்து கொண்டாடுங்கள் என்று கூறுகிறேன்.

இப்போதுள்ள சூழலில் ஊரடங்கை மதிக்கவேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் வாழ்க்கை நல்ல நிலைக்கு வரவேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். கொரோனா பாதிப்பு குறைந்ததும் தொண்டர்களைச் சந்திக்க வருவேன்.

அதிமுகவின் 3ஆம் தலைமுறை தலைவராக நான் வரவேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். தொண்டர்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.”

என பதிலளித்துள்ளார்.