திருப்பூர்:
திருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமாவின் கார் மோதி திருப்பூர் அருகே பனியம் கம்பெனி நடத்தி வந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதி வேகமாக காரை ஓட்டிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
கோவை விமான நிலையத்திலிருந்து சத்தியபாமா எம்.பி.யை அழைத்து வருவதற்காக, எம்.பி.யின் கார் ஓட்டுனர் வேகமாக காரை ஓட்டிச்சென்றபோது, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அருண்குமார் என்ப வரது வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து காரை மடக்கினர். அருண்குமார், திருப்பூர் அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, அருண்குமார் சகோதரர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சத்தியபாமா எம்.பி.யின் காரை காவல்நிலையம் எடுத்துச் சென்று குன்னத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.