சென்னை

பிரபல நடிகையும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்பு ராமர் கோவில் குடமுழுக்கில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார். 

நாளை மறுநாள் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி உள்படப் பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.  கோவில் குடமுழுக்கையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடியின் கோவில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தப்படுத்தும் பணியை நடிகையும் பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் குஷ்பு,

”நான் ராமர் கோவில் குடமுழுக்கில் பங்கேற்கவில்லை. எனக்கு இங்கு நிறைய வேலைகள் உள்ளன. நாம் ராமரை தரிசனம் செய்ய சுமார் 500 ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம். இப்போது தான் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் நாம் ராமரை பார்க்க இருக்கிறோம். எனக்கு இது ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. 

இந்த ராமர் கோவில் ஜாதி மதம் சாராமல் இந்திய மக்களின் ஒற்றுமையைப் பறை சாற்றும் விதமாகக் கட்டப்பட்டு உள்ளது.  அயோத்தியிலும் வேற்று மதங்களைச் சார்ந்தவர்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமரை வரவேற்கக் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்வை உலகமுழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். 

பிரதமர் மோடி ராமர் கோவிலை கட்டியதால் பிரதமர் மோடிக்குப் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. சுமார் 92 வயதாகும் எனது அத்தை நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆசீர்வதித்தார். இந்தியர்களின் ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் வெளிக்காட்டும் விதமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது”

எனத் தெரிவித்துள்ளார்.