கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன..

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்

செல்வமணியின் வேண்டுகோளுக்கிணங்க ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி நடிகர்கள் முன்வந்து சுமார் 15 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்தது போல் நடிகர் சங்கத்துக்கும் உதவுங்கள் என்று முன்னணி நடிகர்களுக்கு உதயா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”இன்று கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் நிற்பது தாங்கள் அறிந்ததே. உலகப் பிரபலங்களில் பில்கேட்ஸ்லிருந்து நமது நாட்டு அம்பானி, அதானி வரை பலர் பல லட்சம் கோடிகள் இழப்புக்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்று ஊடகத்தின் வாயிலாக நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதேசமயம் கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கால் அன்றாட சம்பளத்திற்கு வேலைக்குச் செல்லும் எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசிக்கும் பட்டினிக்கும் பரிதவிக்கும் பரிதாப நிலையும் இங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கமும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் அது எந்த அளவுக்கு போதுமானது என்றே தெரியவில்லை. பல தொழில்களைப் போல் திரைப்படத் தொழிலும் இதில் விதிவிலக்கல்ல.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்குப் பல முன்னணி நடிகர்கள் பல உதவிகளைச் செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேசமயம் முன்னணி நடிகர்கள் செய்திருக்கும் உதவிகள் பெப்சி அமைப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே சென்றடையும். பெப்சி அமைப்பில் சேராத தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் 3300 பேரில் 2500 பேர் துணை நடிகர்களாகவும் நாடக நடிகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் படப்பிடிப்பிற்கோ, அல்லது நாடக அரங்கிற்கோ சென்றால் மட்டுமே சம்பளம் கிடைக்கும். அந்த வருமானத்தில்தான் அவர்கள் குடும்பத்தை வழிநடத்த முடியும். இந்த சூழ்நிலையில் ஒட்டுமொத்த ஊரடங்கால், துணை நடிகர்களும், நாடக நடிகர்களும் கரோனாவால் ஏற்படும் பாதிப்பை விடப் பசி பட்டினியால்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் உதவிகள் கிடைக்க நடிகர் சங்க தனி அதிகாரியின் ஒத்துழைப்பின் பேரில் ஐசரி கணேஷ், நடிகர் கார்த்தி, நாசர், பொன்வண்ணன், குட்டி பத்மினி, பூச்சி முருகன், சூரி மற்றும் பல நல்ல உள்ளம் படைத்த நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற பண உதவியை அளித்துள்ளனர். அதன்படி வந்திருக்கும் தொகையோ 15 லட்சத்திற்குதான் இருக்கிறது. அதோடு பலரின் சிறு உதவியால் எங்களால் முடிந்த, கஷ்டப்படும் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இருப்பினும் அனைவருக்கும் உதவிடப் பற்றாக்குறை இருக்கிறது. ஆகவே தயைகூர்ந்து பிரபல முன்னணி நடிகர்களுக்கு என் அன்பான வேண்டுகோள். நடிகர் சங்க உறுப்பினர்களின் பசியைப் போக்க அவர்களின் குடும்பங்கள் பட்டினி இருளிலிருந்து விலக, பெப்சி தொழிலாளர்களுக்கு அளித்தது போல் நடிகர் சங்கத்திற்கும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உதவும் உள்ளம் படைத்தவர்கள்.. தென்னிந்திய நடிகர் சங்க டிரஸ்ட் அக்கவுண்டுக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

The South Indian Artistes Association,
HDFC BANK
Saligramam Branch
Acno: 50100130847592
IFSC Code:HDFC0002082 ’’.

இவ்வாறு உதயா தெரிவித்துள்ளார்.