சென்னை:

பிரபல நடிகர் ஜெய் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன், நடிகர் ஜெய் ஓட்டிச் சென்ற ஆடி சொகுசு கார் தாறுமாறாக ஓடி, சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.  அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்களில் சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து, சாஸ்திரி நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். காருக்குள் அரை மயக்கத்தில் இருந்த நடிகர் ஜெய்யை மீட்டனர். அப்போது அவர், உச்சகட்ட குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஜெய்யுடன் நடிகர் பிரேம்ஜியும் காரில் இருந்தார்.

காரைப் பறிமுதல்செய்த காவல்துறையினர், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சோதனைக்காக காரை அனுப்பிவைத்தனர். ஜெய் மீது குடிபோதையில் கார் ஓட்டுதல், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தது, வேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், நடிகர் ஜெய் விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து. இந்த நிலையில் ஜெய்யை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது.

ஆனால் நடிகர் ஜெய், அவரது வீட்டில் இல்லை என்றும் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இதையடுத்து நடிகர் ஜெய், தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.