சென்னை

க்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.   பல தொழிற்சாலைகளில் அதிக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  ரெம்டெசிவிர் மருந்து அரசின் கட்டுப்பாட்டில் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆயினும் இவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.   பல இடங்களில் இவ்வாறு செய்வோர் பிடிபட்டு கைது செய்யப்படுகின்றனர்.  இந்த கள்ளச் சந்தை வர்த்தகத்தைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் ஸ்டாலின், “உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது.

ஏழை மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதேநேரத்தில், சில சமூக விரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் அதேபோல், ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன.

பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக்கடுமையான குற்றமாகும்.  தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் மீதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர்சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்