சென்னை: சென்னை முழுவதும், மின்சார வயர்கள் பூமிக்கு அடியில் செல்லும் (UG) வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில், மின்சாரத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி கூறினார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடை நேரத்தின் போது,  சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையமும், பென்னகரம் தொகுதியில், உபகோட்டத்தை கோட்டமாகவும் தரம் உயர்த்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர். அதுபோல பாமக உறுப்பினர் ஜி.கே.மணி‘ பேசும்போது,  சம்சாரம் இல்லாமல் வாழலாம் ஆனால் மின்சாரமில்லாமல் வாழ முடியாது எனவும், தமிழகம் முழுவதும் 176 கோட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும்,அதற்கான பகிர்ந்தளிப்பதற்கான விகிதாரச்சாரம் சரியாக இல்லை என்றும், பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கைகள் வருவதாகவும், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம்  அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என கூறினார்.

அதேப்போல், தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு 8,905 மின்மாற்றிகளை மாற்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதைவிட கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் பதில் கூறினார்.