சென்னை: காங்கிரசில்  கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

 கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இதை ஏற்ற சபாநாயகர் அந்த கடிதத்தை ஏற்றுள்ளதாக அறிவித்து உள்ளார்.

முன்னதாக  தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு  அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.  அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்த  நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு ,அ காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார். விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.