ஆடிப்பெருக்கு நன்னாளில் சுமங்கலி பூஜை செய்வது_எப்படி?

 

ஆடிப்பெருக்கு தினமான நாளை மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு பெருக அருள்புரியும். பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

ஆடிப்பெருக்கிற்கு வீட்டில் பூஜை செய்வது எப்படி?

நிறைகுடத்தில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளைச் சேர்க்க வேண்டும். இந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைத்து, சர்க்கரைப் பொங்கல் படைக்க வேண்டும்.  பூக்கள் தூவி அம்மனுக்குரிய போற்றி அர்ச்சனை சொல்ல வேண்டும். பிறகு தீபாராதனை செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்த பிறகு தீர்த்தத்தை மரம், செடிகள் உள்ள இடத்தில் ஊற்ற வேண்டும்.

சுமங்கலி_பூஜை :

ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, பல்வேறு விதமான வழிபாடுகளை செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது.  வாழை இலையை விரித்து அதில் விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்களை வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத் துணி போன்ற மங்களப் பொருட்களையும் வைத்து காவிரி அன்னையைப் பெண்கள் வழிபடுவார்கள்.

பெண்கள் மற்றும் குடும்பத்தினர் காவிரி அன்னையை பூஜித்து பூக்கள் மற்றும் குங்குமம் போன்றவற்றை ஓடும் வெள்ளத்தில் போட்டு வணங்குவர். சிலர் வாழைமட்டையில் விளக்கேற்றி நதிகளில் விடுவர்.  வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டுச் சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.

திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கிக் கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

பார்வதிதேவி தன் திருமணத்திற்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்குத் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும், ஐதீகமும் உள்ளது.

தாலிக் கயிறு மாற்றுதல் :

ஆடிப்பெருக்கு நாளில் புதுமண தம்பதிகளுக்கு வீட்டில் உள்ள மூத்த பெண்கள் தாலியைப் பிரித்து, புதிய தாலிக் கயிறு கட்ட வேண்டும். காவிரித்தாயை மனதில் நினைத்து, அவளது ஆசீர்வாதத்துடன் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுங்கள். இதனால், புதிய வாழ்க்கை மலர்வதுடன் கோடி பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.