பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ‘இரவின் நிழல்’. 96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இதில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு, முதல் பாடலை வெளியிட்டார்.

மேலும் அவர், “பார்த்திபனின் இரவில் நிழல் திரைப்படம் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும். தமிழ் திரைக்கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்” என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் பேசத் துவங்கினார். ஆனால் அவருடைய மைக் தொழில்நுட்பக் கோளாறால் வேலை செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன், வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து சென்று அந்த மைக்கை வீசி எறிந்தார்.

இதை எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி அடைந்தார். அவர் இயல்பு நிலைக்கு வர, சில நிமிடங்கள் ஆனது.

பிறகு பார்த்திபன் வேறு மைக் பெற்று பேசத்தொடங்கினார்.