சென்னை: வங்கக்கடலில் வரும் 29ம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது பலத்த சூறாவளி, கனமழை என பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நிவர் கரை கடந்துவிட்டாலும் பல இடங்களில் இன்னமும் மழை ஓயவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந் நிலையில், வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலையானது தென் தமிழகம் மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.