கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறி புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நேற்று (நவம்பர் 25) நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை ( நவம்பர் 26 ) 2.30 மணிக்கு முழுவதுமாக கரையைக் கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் உள்பட சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், புயல் கரையை கடந்த பகுதியான கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அங்கு விரைந்தார். பிற்பகல் அங்கு சென்றடைந்தவர், அங்கு புயல் சேதம் மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தின் ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட பழனிசாமியிடம், விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர். தொடர்ந்து கடலூர் துறைமுகப் பகுதிக்கு வந்து, சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 13 லட்சம் மக்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, 2299 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியுள்ளனர். கடலூரில் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த 52, 226 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் 77 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை சரி செய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. 1,617 ஹெக்டேர் நெற்பயிர்கள், 315 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. புயல் கடந்து சென்றதும், மின்னிணைப்பு செலுத்தினால் பிரச்சனை இல்லை என்ற பட்சத்திலேயே, மின்சார இணைப்பு கொடுக்கப்படும். மக்களின் உயிர் முக்கியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மின்னிணைப்பை கொடுக்க முடியாது. மின்சாரம் மிகவும் ஆபத்தானது. மின்சாரம் விவகாரத்தில் அரசு அலட்சியத்துடன் இருக்காது. மக்களின் உயிரே எங்களுக்கு முக்கியம். உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்திலேயே, மின்னிணைப்பு வழங்கப்படும். புயலில் இருந்து மக்களை காப்பாற்றுவதே அரசின் கடமை ” சேத விபரங்கள் கணக்கிட்ட பின்னர், மத்திய அரசுக்கு தேவையான நிதி குறித்து கோரிக்கை வைக்கப்படும்.