சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான நீட் குழுவுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க மெட்ரோல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில் 7.5 சதவகிதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலனா அரசு ஆட்சி அமைந்ததும், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது. அந்த குழுவினரும் ஆய்வு செய்து வருவதுடன், தமிழக மக்களிடம் இருந்து கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஏ.கே.ராஜன் குழு அமைத்து,  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தமிழகஅரசு, நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி எனக் கூறியது.

மேலும்,  அரசு பள்ளி மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என ஆய்வு செய்யவே நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் எந்த அரசியல் சாசனமும் மீறப்படவில்லை. மாநில அதிகாரத்திற்கு உட்பட்டுதான் குழு அமைக்கப்பட்டு உள்ளது தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாஜக தொடர்ந்த வழக்கை எதிர்த்து மாணவி ஒருவர், திராவிட கழக தலைவர் வீரமணி,விசிக,மதிமுக அமைச்சர் வந்தியதேவன் உள்ளிட்டோர் இடைமனுதாரர்களாக மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ”வழக்கு தொடர்பாக மத்திய அரசு வரும் 8 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்”, என்று கூறி விசாரணையை ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.