கோவை: மே 25-ந்தேதி முதல் கால்நடை மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர மே 25-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் 25-ந்தேதி  காலை 10 மணி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள், அயல்நாடுவாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கட்டுப்பாட்டில், நான்கு அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. மேலும் பல தனியார் கல்லூரிகளும் உள்ளன.  இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியவை உள்ளன.

கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக சேலம் தலைவாசல், தேனி வீராபாண்டி, உடுமைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் மூன்று கல்லூரிகள் செயல்பட தொடங்குகின்றன. அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையானது பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பம் விநியோகம்  வரும் 25ந்தேதி தொடங்குகிறது.

[youtube-feed feed=1]