கோவை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்துள்ளார்.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் அவருடனிருந்தார்.
அண்ணாமலை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது, அங்குள்ள வடமாநில மக்களிடம் அவர்களுக்குப் புரியும் வகையில் இந்தியில் பேசி தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.