சென்னை

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை ஆளுநர் ஆர் என் ரவியை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

”இந்தியா முழுவதும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர் என்கிற ஏஜெண்டுகளை இறக்கி இணையாட்சி செய்யும் வேலையை மத்திய அரசு செய்கிறது.  பாஜக ஆட்சி எந்த மாநிலங்களில் எல்லாம் இல்லையோ அங்கெல்லாம் சர்ச்சையான கருத்தை, பரபரப்பை உருவாக்கி, நெருக்கடியை ஏற்படுத்தும் வேலைகளை ஆளுநர்கள் செய்கிறார்கள். குறிப்பாகத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பணி என்பது அரசமைப்புச் சட்டப்படியாக இருப்பதை, இயங்குவதைக் கவனிப்பதே அவரின் முக்கியமான பணி.  அவர் அதைச் செய்யாமல் தேவையில்லாத அரசியல் வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வளவு சர்ச்சையாகப் பேசியதில்லை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவருக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார், குடியரசு தலைவர் இந்த புகார் கடிதத்தின் மீது விரைந்து ஒரு நல்ல முடிவெடுத்து தமிழகத்தில் தொடர்ந்து குழப்பம் விளைவித்து வரும் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

எனக் கோரிக்கை விடுத்துள்ளார்