சென்னை:
பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அவருக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்குப் பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

தற்போதுள்ள கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய வாசல் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவுச் சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது.

உச்சநீதிமன்றத்தில் சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்குத் தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற மனுக்களை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.