சென்னை

மிழகத்தில் 680 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.

 

தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் 37 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன.  இந்த பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் 6000 உள்ளன.  தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறைக் காலம் என்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன  எனவே இவை திறக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் இடமாறுதல் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இடமாறுதல் கலந்தாய்வு துவங்கியது.   இந்த இடமாறுதலின்போது பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக கூடுதல் பொறுப்பில் இருந்தவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் வாங்கி சென்று விட்டனர். இதனால் தற்போது 680 மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.  அப்போது தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் அப்பள்ளிகள் எப்படிச் செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.  பள்ளிகளில் நிர்வாக பிரச்சினை ஏற்படும் என மற்ற ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  மேலும் அதற்குள் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.