திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில்
திருக்கச்சூர் – கச்சபேஸ்வரர் கோயில் (விருத்திட்ட ஈஸ்வரர்) சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்.
இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கே சண்டேஸ்வரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார். அந்தணர் வேடத்தில் வந்து இறைவன், சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து வழிபட்டமை ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இரு கோயில்கள்:
இத்தலத்தில் இரண்டு சிவபெருமான் கோயில்கள் அமைந்துள்ளன.
கச்சபேசம் திருக்கோயில்.
ஊர் நடுவிலுள்ளது கச்சபேசம் திருக்கோயில். இக்கோயில் ஆலக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தியாகராஜர் , அமிர்த தியாகேசர் என்றழைக்கப்படுகிறார். தேவர்களும் , அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையும் போது மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தாங்கும் சக்தியைப் பெறத் திருமால் இவ்வாலயத்தில் சிவபெருமானை வழிபட்டார் (கச்சபம் என்றால் ஆமை) என்பதால் , இவ்வூர் கச்சூர் எனும் பெயர் பெற்றது.
மலையடிவாரக் கோயில்.
இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு ஔஷத கிரி எனும் பெயருண்டு. சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம், இத்தல இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண், திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது.