சென்னை: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரபல யுடியூபரான சாட்டை துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாகவும்த கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சாட்டை துரைமுருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து அ.துரைமுருகன் நீக்கப்படுகிறார். அவரது கருத்துக்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது என்று தெரிவித்து உள்ளார்.
சாட்டை துரைமுருகன் தக்கலையில் பேசியது என்ன?
மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரான பிரபல யுடியூபர் சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு, தமிழகஅரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை முருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25 – ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு. அதனை தொடர்ந்து நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
சாட்டை முருகன் ஏற்கனவே, தற்போதைய மின்துறை அமைச்சர், செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்பு படுத்தி அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு, 55 நாட்களுக்கு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
