சென்னை
நேற்று கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் நேற்று முன் தினம் நடந்த தாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் துரைமுருகன் தமிழக முதல்வரைக் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதையொட்டி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”திருச்சி மாவட்டம் திருச்சி தெற்கு தொகுதியைச் சேர்ந்த துரைமுருகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.