சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கிகியுள்ளது. காலை 11 மணி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதி மற்றும் கேரளாவுக்கும்  அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ந்தேதி நடைபெற உள்ளது.

ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி உள்ளது. தமிழகத்தில், 234 சட்டமன்ற தொகுதிகள் உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் இன்று வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

நாளையும், நாளை மறுதினமும் ( சனி, ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாது.  வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மார்ச் 19ந்தேதியும்,  வேட்புமனு பரிசீலனை மார்ச் 20ந்தேதியும் நடைபெற உள்ளது வேட்புமனு திரும்பப்பெறும் நாள் மார்ச் 22ந்தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், வேட்புமனு விண்ணப்பங்களை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விண்ணப்பத்தை கம்ப்யூட்டரிலேயே தட்டச்சு செய்து பூர்த்தி செய்து, அச்சு நகல் எடுத்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக பிரமாண பத்திரத்தை, சொத்து, கடன் உள்ளிட்ட விவரங்களுடன் பூர்த்தி செய்து அளிக்கலாம். நோட்டரி மூலம் ஒப்புதல் பெற்று நேரடியாகவும் அளிக்கலாம். ஆன்லைன் மூலம் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது.

வேட்புமனுத் தாக்கல்  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலமாக அளிக்கும் வசதியை இந்த தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. நேரடியாகவும் அவர்கள் டெபாசிட் தொகையை அளிக்கலாம்.

டெபாசிட் தொகை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருகு  ரூ.5 ஆயிரமாகும், மற்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம்.

வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் (முன்பு 5 பேர்) செல்லலாம்.

வேட்பு மனுத்தாக்கலுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் ஐந்தில் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாகனத்தில் வரக்கூடாது.

வேட்பு மனுத்தாக்கலின்போது ஒரே நேரத்தில் வேட்பாளர்கள் வந்துவிடக்கூடாது என்பதால், அவர்களுக்கு வெவ்வேறு நேரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

ஊர்வலங்கள் நடத்தினாலும், மாநில அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊர்வலம் செல்ல முடியாது. இந்த நெறிமுறைகளை மீறினால் அதில் தேர்தல் ஆணையம் தலையிடாது.

ஆனால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மூலம் தண்டனை விதிக்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை.

அதற்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ளவர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுவதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்யும்.

இந்த முன்னுரிமையை பயன்படுத்தி பலர் தடுப்பூசி போட்டுள்ளனர். தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா சோதனையும் கட்டாயமாக்கப்படவில்லை.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குப்பதிவு அன்று கூடுதலாக 3 உதவியாளர்களை நியமிக்க இருக்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை கொடுத்து உதவுவதற்காக ஒருவர், மாவட்ட தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்படுவார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாக்குச்சாவடிக்கு வெளியே 2 உதவியாளர்களை சுகாதாரத்துறை நியமிக்கும்.

உடல் வெப்பத்தை பார்ப்பது, சானிடைசர் கொடுப்பது போன்ற பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தலா ரூ.300 செலவில் சீருடை வழங்க இருக்கிறோம். அதன் நிறத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வீடு வீடாகச் செல்லும்போது, வாக்குசாவடி அலுவலரை எளிதாக அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

234 தொகுதிகளுக்கும் சேர்த்து 118 தேர்தல் செலவீன பார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு செலவீன பார்வையாளர் ஆகியோர் 12-ந்தேதி (இன்று) வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகின்றனர்.

சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை பார்வையிடுவார்கள். அதுபோல போலீஸ் பார்வையாளர்கள் 40 பேர், பொதுப்பார்வையாளர்கள் 150 பேர் 19-ந்தேதி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் சோதனையில் 10-ந்தேதிவரை ரூ.47.65 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பிடிபட்டுள்ளன. இவற்றில் பணம் மட்டும் ரூ.45.55 கோடி பிடிபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.