சென்னை: தலைநகர் சென்னையில் 9 இடங்களில்  மேம்பாலங்கள் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலம் அமைப்பது குறித்து மாநில நெடுஞ்சாலையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏற்கனவே 22 மேம்பாலங்கள் உள்ளன. தற்போது மேலும் 9 மேம்பாலங்களை அமைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கட்டப்பட்டு வரும்,  வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் மேம்பாலங்கள் முடியும் தருவாயில் உள்ளது. இதைத்தொடர்ந்து,  மேலும் 6 பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை 4 வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

ராஜீவ்காந்தி சாலையில் உள்ள இந்திராநகர் சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் “யு” வடிவில் 2 மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்கு ரூ.108.13 கோடி ஒதுக்கப்பட்டது.

மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்கு மொத்தம் ரூ.46.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

காட்டுப்பாக்கம், குன்றத்தூர், குமணன்சாவடி சந்திப்பில் ரூ.485 கோடி மதிப்பீட்டில் பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

பாடி மேம்பாலத்தின் இரு கரங்கள் ரூ.100 கோடியில் அகலப்படுத்தப்படுகிறது.

வடசென்னையின்  வியாசர்பாடி கணேசபுரத்தில் சுரங்கப்பாதையில் மேம்பாலம் அமைக்க ரூ.142 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.132 கோயில் மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 5 மேம்பாலம், மணலி சாலையில் எல்.சி. கேட் இடத்தில் மேம்பாலம், சின்ன நொளம்பூரில் உயர்மட்ட பாலம், கொருக்குப்பேட்டை ஆர்.ஒ.பி. கட்ட நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையை பூந்தமல்லி உயர்சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.

ஜீவன் நகரில் மேம்பாலங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் அருகே ஆஸ்பிரான் கார்டன் காலனி, ஜி.எஸ்.டி. சாலையில் எம்.கே.என். சாலை மற்றும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை  தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை 3.5 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை ரூ.322 கோடியில் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை உயர்த்தப்பட்ட தாழ்வாரம் அண்ணா சாலையில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைக்கும். இதனால் விமான நிலையத்திற்கான இணைப்பு மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.