புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பகுதியில் மேலும் 7 பழங்கால உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆரோவில் பகுதியில் அடுத்தடுத்து மீட்கப்படும் சாமி சிலைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பழங்ககால கோவில்களில் இருந்து திருடப்பட்டுள்ள கோவில் சிலைகளை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக தனிப்படை அமைத்து, மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதுச்சேரியில் இங்கிலாந்து நாட்டினருக்கு சொந்தமான, ஆரோவில் பகுதியில் இருந்து பல சிலைகள் மீட்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று  ஆரோவில் அருகில் உள்ள பொம்மையபாளையம் என்ற பகுதியில் உள்ள  ராமச்சந்திரன் என்பவருடைய  உலோக சிலைகள் விற்பனை கடையில், உலோக சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அங்கு அப்படிப்பட்ட சிலைகள் ஏதும் மாட்டவில்லை. இருந்தாலும், கடை ஓனரிடம், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, அவர் தனக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அங்கு நடத்திய சோதனையில்,  அர்த்தநாரீஸ்வரர், கிருஷ்ணர், புத்தர், மயில் சிலைகள் உள்பட 7 உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.