சென்னை,

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்டு 23ந்ததி ஒரு  மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து ஆகஸ்டு 24ந்தேதி பரோல் காரணமாக சிறையைவிட்டு வெளியே வந்தார்.

பேரறிவாளன்  தந்தை குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். எனவே, தந்தையை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இதனையேற்று, கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி ஒரு மாத பரோலில், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பின்னர் அவரது தாயார் வேண்டுகோளை ஏற்று மேலும்  ஒரு மாதகாலம் பரோல் நீடிக்கப்பட்டது.  கடுமையான நிபந்தனைகளுடன் தனது ஜோலார்பேட்டை  வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அவரது அம்மா அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்தார்.

ஆனால், பேரறிவாளர் பரோலுக்கு காங்கிரஸ் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசும் பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து எதுவும் அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் பேரறிவாளனின் பரோல்  நாளையுடன் (24-ந்தேதி) முடிவடைகிறது. எனவே  நாளை மாலை 5 மணிக்குள் வேலூர் மத்திய சிறைக்குள் பேரறிவாளன் அடைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.  தமிழக அரசு இதுவரை மவுனம் காத்து வருகிறது. அவரது பரோல் நீட்டிப்பு குறித்து  பரிசீலிக்குமா?  என்பது உறுதி செய்யப்படவில்லை.

பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படவில்லை என்றால்,  நாளை மாலை 5 மணிக்குள்  சிறைக்கு கொண்டு வரப்பட்டு, அவருக்கு  வழக்கமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு சிறையினுள் அடைக்கப்படுவார்  என்று சிறைதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.