திருச்சி

திருச்சியில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தேநீர்க்கடையில் சிலிண்டர் வெடித்துத் தீப்பிடித்ததில் 7 கடைகள் எரிந்து நாசமாகி உள்ளன.

திருச்சியில் பிரபலமான காந்தி அங்காடியைச் சுற்றி சாலையோரம் பல கடைகள் உள்ளன.  இந்த மார்க்கெட்டின்  பிரதான நுழைவாயிலில் இடதுபுறம் ஒரு தேநீர்க்கடை உள்ளது.  இந்த கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்துத் தீப்பற்றியது.  இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாகப் பரவியது.

தீ பரவியதால் அடுத்துள்ள செல்போன் கடை, ஜூஸ் கடை, பெட்டிக்கடை என மொத்தம் 7 கடைகள் தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளன.    இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.  தேநீர்க்கடை ஊழியர் பரமசிவம் தீக்காயம் அடைந்து திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் அறிந்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அந்த இடத்தை பார்வையிட்டு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறி உள்ளார்.   இந்த தீ விபத்து எரிவாயு சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.  காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.