ஒரே கோயிலில் 64 பைரவர்கள்.

ஊரெங்கும் இருக்கும் 64 பைரவர்களையும் ஒரே சமயம் வணங்குவது சாத்தியமா? சாத்தியம் தான். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூல மூர்த்தியான சிவனே பைரவேஸ்வரர் எனும் பெயரில் கோயில் கொண்டுள்ள தலம்.

இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்யலாம். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் மூர்த்தியாக, ஸ்ரீபைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.

இத்தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர். இக்கோயிலில் அஷ்ட புஜ பைரவர் சிலை உள்ளது. இங்கு 64 பீடங்கள் உள்ளன. இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்பப்படுகிறது. ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாகத் தவம் இருந்து நவகிரகங்களைக் கட்டிப் போட்டான். நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார்.

அவர், இத்தல ஸ்ரீபைரவேஸ்வரிடம் தன் கடமையைச் செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்.

இத்தலத்தில் அவருக்குக் குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார். குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணனின் அழிவு காலம் என்று ஸ்ரீராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம் செய்துள்ளார்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர்தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்குத் தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகம். இந்த பைரவரை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். பித்ரு சாபங்களால் பல வருஷங்களாகப் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளும், பில்லி, சூனியம், செய்வினை, ஏவல், மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.

பைரவரிடம் வேண்டிக்கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்குப் போட வேண்டும். சனி பகவானுக்கு குருவாக விளங்குபவர் இந்த பைரவர்தான். அதனால் சனிக்கிழமை வழிபாடு சிறப்பு. “கால தேவன்’ என்று அழைக்கப்படுபவர் ஸ்ரீ மஹா காலபைரவர்!

இவரைப் பல கோடி ஆண்டுகளாகத் தியானித்து பைரவ சித்தராக ஆனவர்தான் ஸ்ரீ வாரதாரகர் என்ற சித்தர் ஆவார்; இவ்வூரில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. 1.காசிவிஸ்வநாதர் 2.பைரவநாதர் 3.கைலாசநாதர்.

மிகப்பழைமை வாய்ந்த சோழர்கால கற்கோயில். வழி, சுற்றுச் சுவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் கோயில் முகப்பு என ஒன்றும் இல்லை. உள்ளே சென்றால் கம்பீரமான முகப்பு மண்டபம் கொண்ட கோயில், தற்போது முகமண்டபத்தின் அடித்தளம் மட்டுமே உள்ளது. கருவறையில் இறைவன் பைரவேஸ்வரர் பெரிய லிங்கமாகக் கம்பீரத்துடன் உள்ளார். இறைவி தென்புறம் நோக்கியபடி உள்ளார். கருவறை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் மாடங்களில் உள்ளனர்.

கும்பகோணம்- சென்னை நெடுஞ்சாலையில் 13 கி.மீ. தூரத்தில் உள்ள சோழபுரத்தில் இக்கோயில் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் பைரவபுரம் என்பதாகும்.