சென்னை:

அதிமுக அணிகள் இணைய நான் கொடுத்த 60 நாட்கள் கெடு முடிந்துவிட்டது. இனி நான் தலைமை அலுவலகம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று டிடிவி தினகரன் கூறினார்

அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட டிடிவி தினகரன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘60 நாட்கள் நேரம் கொடுத்த பின்பே புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கட்சியில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். சில அமைச்சர்களை பேச்சை கேட்டு கடந்த 2 மாதமாக அமைதியாக இருந்தேன்.

அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கட்சியின் துணைப்பொதுசெயலாளரை தடுத்து நிறுத்த யாருக்கும் அதிகாரமில்லை. 2019 பாராளுமன்ற தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்காகவும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘‘எதிரிகளால் ஏதும் நடக்ககூடாது என்பதற்காக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்திருக்கலாம். கட்சி அலுவலகத்திற்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தொண்டர்களுக்கானது. சட்டத்தை மீறி காவல்துறை செயல்படாது என்பது எனக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தை தற்போது அறிவித்துள்ளேன்.

எங்கள் இயக்கம் ஒன்றுபடும், பாராளுமன்றதேர்தலில் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். விரைவில் அமைச்சர்களுக்கு பயன் நீங்கி எங்களுடன் இணைவார்கள். தற்போதைய அரசாங்கம், சசிகலா கைகாட்டியதால் தான் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கே உள்ளது. கட்சியின் துணை பொதுச்செயலாளர் தலைமை அலுவலகம் செல்வதை யாரும் தடுக்க முடியாது’’ என்றார்

பின்னர் நிருபர்களிடம் கேள்விகளுக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘தேவைப்படும்போது எப்பொழுது வேண்டுமானாலும் தலைமை அலுவலகத்துக்கு செல்வேன். கட்சியில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நான் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அதிமுக அணிகள் நிச்சயம் ஒன்றுபடும். பயத்தின் வெளிப்பாட்டில் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.

பாஜகவுடனான தேர்தல் கூட்டணி குறித்து தற்போது கூற இயலாது.திவாகரனுக்கும், எனக்கும் எந்த காலத்திலும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை. இனியும் கருத்து வேறுபாடு வராது. நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படும், முதலமைச்சரும் நிச்சயம் பங்கேற்பார். அமைச்சர்கள் வகித்து வரும் கட்சிப் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.

இரு அணிகளும் கண்டிப்பாக இணையும். பிறகு யார் தலைமையில் கட்சி நடக்கும் என்பதை தீர்மானிப்போம். தமிழக மக்களின் நலன் கருதி ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதிரித்ததில் தவறில்லை. ஜெயக்குமார் மீனவர் பிரிவு செயலாளர் தான். அவரை சசிகலா தான் நியமித்தார். ஜெயலலிதா வகுத்த பாதையில் சென்றால் 5 ஆண்டுகள் ஆட்சியை அரசு நிறைவு செய்யும்’’ என்றார்.