நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவிகள் அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு நிதியுதவி கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.  இன்று காலை வழங்கம்போல அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. ஆனால், காலை உணவு சாப்பிட்ட 10 நிமிடத்திற்குள்  50க்கும் மேற்பட்ட விடுதி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாணவிகள் அனைவரையும், ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம், அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தினர் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதில் பலருக்கு வாந்தி மயக்கம் சரியாகி விடுதிக்கு திரும்பியதாகவும்,  20க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி உள்பட பலதுறை அதிகாரிகள், காவல்துறையினர் விரைந்துவந்து விசாரணை நடத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.