சென்னை

சென்னை புறநகரான புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடெங்கும் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யவும் அவற்றை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.  காவல்துறையினருக்குச் சென்னை புழல் அருகே செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசியத் தகவல் வந்தது.

இதையொட்டி அந்த பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.  சோதனையில் புழல் அருகே உள்ள சித்தராமன் நகர் என்னும் இடத்தில் ஒரு தனியார் லாரி நிறுத்துமிடத்தில் இருந்த லாரியில் 5 டன் செம்மரக் கட்டைகள் பதுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அந்த செம்மரக் கட்டைகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   கட்டைகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.   பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.5 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.