டெல்லி : நாடு முழுவதும் சட்ட விரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாவும், இது தொடர்பாக 4,975 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதுடன் 53 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்து உள்ளது.
விசேச நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் சிறப்பு ரயில்களையும் இயக்கி மக்கள்சேவையாற்றி வருகிறது இந்தியன் ரயில்வே. ஆனால், இதுபோன்ற ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவில் பல்வேறு குளறுடிகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ரயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் என பலர் முறைகேடாக முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்று, அதிக விலைக்கு விற்பனை செய்வதும் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிக்கெட் கவுண்டர்களின் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டில் (2024) நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில் சட்ட விரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4,975 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம்இருந்து, 53 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 24, 529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தட்கல் மற்றும் பல்க் புக்கிங்கில் முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து, 26,442 இணையதள ஐடிக்கள் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.