சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் உருவாகி உள்ளது.  இந்த கட்சியில், பாரிவேந்தரின் ஐஜேக கட்சி, நடிகர் சரத்குமாரின்  சமத்துவ மக்கள் கட்சி  இணைந்துள்ளது.

இந்த நிலையில்,   மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன்  ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணியில் தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து  ஐ.ஜே.கே துணை பொதுச்செயலாளர் ரவி பச்சமுத்து, ச.ம.க. தலைவர் சரத்குமார் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக  எங்கள் கருத்தினை பரிமாறிக் கொண்டியிருக்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டியிருக்கிறோம் என்றார். எதற்கும் ஒரு தொடக்கம் தேவை, இந்த தொடக்கம் சிறப்பான தொடக்கமாக அமையும் என்று ரவி பச்சமுத்து கூறினார்.

இவரைத்தொடர்ந்து பேசிய சரத்குமார், சிறந்த கூட்டணியை அமைப்பதற்கும், இந்த தேர்தலை சந்தித்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பயணித்து கொண்டியிருக்கிறோம். மாற்றம் தரும் கூட்டணி அமைந்துள்ளது. நாளைக்குள் கூட்டணி, தொகுதி பங்கீடு என அனைத்தும் நிறைவடைத்துவிடும் என்ற நம்பிக்கை எல்லாரிடமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.