நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அதிபர் ராஜபக்சே தலைமறைவானார், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்.

அதிபர் பதவியில் இருந்து விலக கோத்தபய ராஜபக்சே நான்கு நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். அவருடன் பேசியதாக தெரிவித்த சபாநாயகர் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலை வெளியிடவில்லை.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் நிச்சயமயற்ற நிலையில் உள்ள நேரத்தில் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை 13 ம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார்.

அதே வேளையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீ ஆகியவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புகுந்ததால் அங்கு வீசப்பட்ட கழிவுகளை போராட்டக்காரர்கள் இன்று அகற்றி வருகின்றனர்.

கொழும்பு நகரில் இன்று பெருமளவு அமைதி திரும்பியுள்ள நிலையில், ராணுவத்தினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று இலங்கை ராணுவ தலைமை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.