சென்னை

சென்னைக்குத் துபாயில் இருந்து விமானம் மூலம் ரூ.3.5 கோடி தங்கம் கடத்தியதாக பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஒரு விமானம் வந்தது.  இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து, துபாயில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். பெண் பயணி ஒருவரின் பெட்டியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

அந்தப்பெட்டியில் சுமார் 7 கிலோ எடையுள்ள ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அந்தப் பெண் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

விசாரணையில்  அந்தப் பெண்  பெட்டியை வேறு இரண்டு நபர்கள் தன்னிடம் கொடுத்ததாகக் கூறினார். அந்த 2 பேரையும் தேடிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவர்களையும் கைது செய்தனர். மூவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.